Author: - இரவீ -
•AM 1:35
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

"இரவீந்திரன்" - எனது அம்மா தேர்வு செய்த பெயர் .

பெயர் பிடிக்குமா ? நல்ல கேள்வி - இதுவரை நான் இதற்க்கு யோசித்தது இல்லை...
யோசிச்சு பார்த்தா... ரவி = சூரியன்; இந்திரன் = தேவலோக தலைவன் - "இ" ய தூக்கி முன்னால போட்டு "ரவி" தூக்கி நடுவில போட்டா... என் பேரு, பிறகு என்ன புடிச்சு தான இருக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

நெஞ்சு கனக்க நான் கண் கலக்கிய போது. (அது எப்பன்னு கேக்க கூடாது).

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும்,
நாகேஷ் பிடிக்குமா, வடிவேல பிடிக்குமானு கேக்குற மாதிரி இருக்கு - ஏன்னா என் கையெழுத்தை பார்த்தா நான் கூட சிரிப்பேன். (ஆமாங்க அம்புட்டு கிறுக்கலா இருக்கும்).

4).பிடித்த மதிய உணவு என்ன?

உணவு - இது நம்ம ஏரியா...
தலைவாழை இலைபோட்டு, அதில் சூடான சாதம் போட்டு - பருப்பு, நெய் ஊற்றி - அந்த இலை மணத்துடன் சாப்பிட பிடிக்கும். (பருப்புக்கு பதிலா எங்க அம்மா வைக்கும் கதம்ப சாம்பார் போட்டு சாப்ட்டா - அட போங்கப்பா பிறவி எடுத்த பயனே முடிஞ்சிருச்சு அப்டீனு சொல்லுவீங்க).

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டுங்க... "சிலரை பார்த்ததும் பிடித்துவிடும் , சிலரை பார்த்தாலே பிடிக்காது". இன்னமும் இதுக்கு காரணம் தெரியல.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

சந்தேகமே இல்லாம அருவி ... உப்பு தண்ணீர் எப்படி வாசம் மிக்க நீரை எதிர்கொள்ள முடியும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

என்ன பாத்துகிட்டு இருந்தா அவங்க முகத்தை பார்ப்பேன், இல்லைனா மேலிருந்து பாதம் வரை நோட்டம் போகும்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன?
பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: உடனே நம்பிவிடுவது.

பிடிக்காத விஷயம்: உடனே நம்பிவிடுவது.
(கோப்பி பேஸ்ட் தவறு எல்லாம் இல்ல - இரண்டுக்கும் ஒரே பதில் தான்).

9.உங்க "சரி பாதி" கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

மொதல்ல "சரி பாதி" யாருன்னு கண்டுபுடிச்சி சொல்லுங்க.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

என் நண்பர்கள் - அவர்களுடன் இருக்கும் போது உலகம் எனக்கொரு சுண்டைக்காய்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெள்ளை.

12.என்ன கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

நண்பனின் குறட்டை சப்தம், இளையராஜாவையும் மீறி என் காதுக்குள். (தாங்கலடா சாமி ...)

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை ?

ஊதா அல்லது பிங்க்.

14.பிடித்த மனம் ?

நிறைய இருக்கு - கொஞ்சம் உங்களுக்காக ...
- தாழம்பூ வாசனை,
- சித்தனாதன் திருநீர் வாசனை,
- மாலையில் மொட்டு வெடிக்கும் பீர்க்கம்பூவின் வாசனை.
- புது புத்தகம் வாசனை,
- மீரா சீயக்காய் தூள் போட்டு தலை குளித்த வாசனை.
- வெண்ணை உருக்கி நெய் எடுக்கும் போது முடிவில் முருங்கை கீரை கொழுந்தை அதில் போடுவார்கள் 'அப்ப வரும் பாருங்க ஒரு வாசனை' ம்ம்ம்ம்...

15.நீங்க அழைக்கப் போகும் பதிவர்களிடம் உங்களுக்கு பிடித்த விஷயம்.
அவரை அழைக்கக் காரணம் என்ன ?

1) இவரோட பதிவ என் பதிவாவே தான் நான் பார்ப்பேன் - ஏன்னா அந்த அளவுக்கு எனது சிந்தனை அவருடைய வரிகளில் இருக்கும், இவரை இவரோட மந்திரிக்கு கிடைத்த ஆப்பு மற்றும் கருவறையும் இருட்டறையும் பதிவில் தான் முதலில் சந்தித்தேன்.

2) இவரு கொஞ்சம் வித்யாசமான ஆளு - பாருங்க யாரு இவருன்னு ... இவரோட
உலகின் வித்தியாசமான திருவிழாக்கள் 1 & 2 எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு.
அந்த குரங்கு திருவிழா சூப்பரு.

3) இவரோட திருந்தி தொலைங்கடா வில் அறிமுகமாகி - இந்த படம் பாக்கலாமா வேணாமான்னு.... இவர் பதிவை போய் பார்க்கவச்ச பதிவர்.

4) இவங்க ஒரு கும்மி கூட்டத்தின் தலைவி, இவங்களோட கலாட்டா டைம் 1 அறிமுகம் கொடுத்தது ... அப்பறம் தான் தெரிஞ்சது - இவங்களும் நம்ம மாதிரி ஆளுன்னு (அதாங்க அந்த சாப்பாட்டு விஷயத்துல).

5) இவரோட கவிதைகள் எளிமையா இனிமையா இருக்கும், மிக சுலபமா வார்த்தைகளுடன் விளையாடுவார் - எந்த சிறு உணர்வையும் கவித்துவத்தோட பார்த்திருப்பார் - எனக்கு மிக மிக பிடித்த கவிதாசிரியரில் ஒருவர். இவரோடத்தில் எதை வேணும்னாலும் படிச்சு பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.

6) இவருடைய கருத்துக்கள் எனக்கு மிகவும் ஒத்து போவதால் இவரை ரொம்ப பிடிக்கும், யாரா? சூரியனை இங்கு சொடுக்கவும்.

7) கும்மியடிச்சலும் இவர மாதிரி யாரும் கும்மியடிக்க முடியாது - மிகவும் ஜாலியான மனிதர், இவர் பார்த்த பின்புதான் ஹாலிவுட் படம் எல்லாம் ரிலீஸ் பண்ணுவாங்க. ஆனா இவர் அங்கபோய் என்ன பக்குரார்னு யாருக்கு தெரியும்???.

இவங்க எல்லோரையும் அழைக்க காரணம் - அவர்களை தெரிந்துகொள்ள ஆர்வம் .

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்
பிடித்த பதிவு எது?

பிடிக்காதது எதுன்னா பட்டுன்னு ஒன்னும் இல்லைன்னு சொல்லிடலாம், பிடிச்சது எதுன்னா நிறைய இருக்கே ... ஒப்பீடு சொல்லனும்னா ஹேமாவின் உப்புமட சந்தியை விட
குழந்தைநிலா எனக்கு மிகவும் பிடித்த தளம், இந்த தளம் எனது கணினியில் அதிக நேரம் திறந்திருக்கும் தளம் கூட.


17. பிடித்த விளையாட்டு ?

எல்லா விளையாட்டும் பாக்க பிடிக்கும்னாலும், ஜிம்னாஸ்டிக் மேல பிரியம் அதிகம், அதுவும் சென்ற ஒலிம்பிக்கில் பார்த்த வாட்டர் ஜிம்னாஸ்டிக்... அம்மாடியோ...இன்னும் கண்ணுல நிக்குது.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லேங்க, சும்மா போஸ் குடுக்க குளிர் கண்ணாடி எப்பவாவது போடுவதுண்டு.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ஒன்னு நல்ல கதை இருக்கணும், இல்லை நல்ல நகைச்சுவை இருக்கணும் - (இதெல்லாம் இல்லைனா நான் ஏன் அங்க இருக்கணும்).

20.கடைசியாகப் பார்த்த படம்?

"ஸ்லம் டாக் மில்ளிநிஒர்" - இதுக்கா 8 ஓஸ்கார் ?

21.பிடித்த பருவ காலம் எது?

கூதிர் காலம்.

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க ?

அந்த கெட்ட பழக்கம் எல்லாம் கிடையாது ...

23.உங்கள் டெச்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ஒரு வரைமுரையே கிடையாது ... குட்டி பாப்பாஸ், பில்கேட்ஸ் பொண்ணு, ஐஸ்வர்யா ராய், புதுசா வந்த நடிகை, நாய்க்குட்டி, ஆகாயவிமானம், பூ, என மாறிக்கிட்டே இருக்கும்... ஒரு காலவரை அற்று.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : மழலை, சினுங்கள், புல்லாங்குழல்.
பிடிக்காத சத்தம்: அழுகை, சிலர் சாப்பிடும் போது எழுப்பும் (இப்ச் பிச் ...).

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு ?

நெதர்லாந்த்(NL), மிக அருமையான நாடு.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நிறைய விஷயம் தெரிஞ்சுக்கணும்னு நினைப்பேன் - அதன் விளைவு நான் பெற்ற பத்திற்கும் மேற்பட்ட சான்றிதழ், ஒரு டிப்ளமோ, ஒரு முதுகலை டிப்ளமோ, இரண்டு இளநிலை பட்டம் மற்றும் இரண்டு முதுகலை பட்டம்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.

நம்பிக்கை துரோகம். (அதற்க்கு மன்னிப்பே கிடையாது).

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பேறித்தனம்.

9.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

பசுமையான மலையும் மலையை சார்த்த இடமும் ரொம்ப பிடிக்கும், இருந்தாலும்
சிம்லா - டார்ஜிலிங் ஒரு முறை போய் பார்க்கணும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

வள்ளலார், விவேகானந்தர் மாதிரி ... இல்லாட்டியும் அவங்க சொன்ன சில விஷயங்கள செய்யனும்னு ஒரு ஆசை.

31.மனைவி(கணவர்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் !

மொதல்ல அவங்க வரட்டும், அப்பறம் அவங்கள கேட்டு சொல்லுறேன்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.

"எடுத்து செல்ல எதுவும் இல்லை - விட்டு செல்லுங்கள்".



விதி முறை
.மூணு பேரை மட்டுமே அழைக்கலாம்.
.இந்த அழைப்பு மணி எவ்வளவு தூரம் போகுதுன்னு பார்க்க உங்களுக்கு முன்னால் அழைக்கப்பட்ட 5 பேரின் பெயரைப் போட வேண்டும்.

நான் அழைப்பது : (பொன்னாத்தா வின் விட்டுப்போன 2 பேர் + ஹேமாவின் விட்டுப்போன 2 பேர் + என்னுடைய 3 பேர் ஆகா மொத்தம் 7 பேர்)

நட்புடன் ஜமால்:

கணினி தேசம்:

கடையம் ஆனந்த்:

G3 :

புதியவன்:

ஆதவா :

ஆளவந்தான்:

இன்னைக்கு நிம்மதியா தூங்குவேன் - 7 பேர மாட்டிவிட்டாச்சுல.

எனது நன்றி: என்னை மாட்டிவிட்ட

உப்புமடச் சந்தி - ஹேமா மற்றும்
நிலாவும் அம்மாவும் -(எ)பொன்னாத்தா சண்டைக்கோழி.
ஆகியோருக்கு.
Author: - இரவீ -
•AM 12:54
ஆண்டவனிடம் வைத்த அறிவு தேடுதலை விட,
உன் அழிவு தேடுதல் அதிகம்...

ஆதலால் ...

இன்றும் தலை முழுகுகிறேன்,
நீ இறந்திருக்க மாட்டாயா என்று.
Author: - இரவீ -
•AM 1:23
ஆரம்பபள்ளியில் படிக்கும் போது, மிக அரிதாக கிடைக்கும் ஊர் திருவிழா, மற்றும் உறவினர் ஊர் காசை - அன்றே நான் செலவிட்டாலும், தங்கையின் காசில் - அவ்வப்போது "காசன்கொட்டயார்" (கடைகாரர் பெயர்) கடையில் புளிப்பு மிட்டாய் வாங்கி சாப்பிடுவது வழக்கம். அதுல சுவாரஸ்யம் என்னன்னா என் தங்கை ஏமாந்து போறது ...

புளிப்பு மிட்டாய பாத்தீங்கனா மேல் பகுதி சற்று சொதசொதப்பான இனிப்புடனும், மத்தியில் பளிங்கு போன்ற பகுதியும் இருக்கும்.

ஒரு நாள் தங்கைக்கு வாங்கிய மிட்டாய் என் வாய்க்குள் வந்துவிட்டது (நான் தான் போட்டுட்டேன்), போட்டுட்டு திரும்பி பாத்தா தங்கை... நம்ம சமாளிபிகேசன் புத்தி உடனே வேல செய்ய ... ஒரு பொய் அந்த இடத்துல பிறந்தது, அதாவது "புளிப்பு மிட்டாய்ல உள்ளுக்குள்ள இருக்கும் பளிங்கு பகுதி மட்டுமே நல்லா இருக்கும் - மேல உள்ள சொத சொத பகுதி சும்மா தான்" னு ஒரு புருடா விட்டேன்,

அன்னிலேர்ந்து அடிச்சது யோகம், எப்ப என் தங்கை மிட்டாய் வாங்கினாலும் -சாப்ட்டுட்டு பளிங்கி எனக்கு குடுண்ணேனு முதல் படையல் எனக்கு வந்திடும்.

(இப்ப அதுக்கு திட்டு வாங்குறது வேற விஷயம்).